அலுவலக வேலைகளை அவசர அவசரமாக முடித்துக்கொண்டிருந்தான் கோபி. பன்னாட்டு மென்பொருள் நிறுவனத்தில் கணிப்பொறியாளராக பணியாற்றிக் கொண்டிருக்கும் இவன், தீபாவளிப் பண்டிகை விடுமுறையைப் பெற்றோர்களுடன் கொண்டாட இன்று இரவு அவனுடைய சொந்த ஊருக்குச் செல்கிறான்.
"Monday வந்துடுவ இல்ல?" என்றார் அவனது மேனேஜர்.
"வந்து தொலையறேன்" என மனதில் நினைத்துக் கொண்டு, "கண்டிப்பா ஸார்" என்றான் கோபி.
வாகன நெரிசலில் மீண்டு பேருந்து நிலையத்திற்க்கு வருவதற்குள் போதும் போதும் என ஆகிவிட்டது. பண்டிகை என்பதால் பேருந்து நிலையத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பண்டிகைக்காக கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப் படுவதால் அவன் பயணிக்க இருக்கும் பேருந்தைக் கண்டுபிடிக்க சிறிதே தாமதமானது.
"என்ன கூட்டம் டா" என முனுமுனுத்துக் கொண்டே முன்பதிவு செய்த இருக்கையில் வந்தமர்ந்தான். Meeting, Project மற்றும் மேனேஜர் தொல்லை இல்லாமல் மூன்று நாட்கள் நிம்மதியாக இருக்கலாம் என்பதை நினைத்துப் பெரு மூச்சு விட்டான்.
பேருந்து புறப்பட சற்று முன்பு.....
பயணி: பஸ் திருவண்ணாமலை போகுங்களா??
பே.நடத்துனர்: சீட் இல்ல பா....ஸ்டேன்டிங் தான்....
பயணி: பரவாயில்ல ஸார்
பே.நடத்துனர்: சரி ஏறு. வழியில நிக்காம உள்ள போ பா....
நாள் முழுவதும் வேலை செய்து களைப்பாக இருந்ததாலும், ஊருக்குச் செல்லவிருக்கும் குதூகலத்தினாலும் இந்த இரைச்சல்கள் அவனது செவிகளுக்கு பெரும் பொருட்டாய் தெரியவில்லை. இமைகள் மெல்ல மூடின. பேருந்தும் புறப்பட்டது, அரை மணி நேரம் தாமதமாக.
பேருந்து ஓட்டுநர் களைப்பாருவதற்காக (தேநீர் பருகுவதற்காக) அதிகாலை 2 மணியளவில் பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்து நிறுத்தப்பட்ட சில மணித்துளிகளில் பேருந்தில் இருந்த ஒரு வயதுள்ள ஒரு குழந்தை அழ ஆரம்பித்தது. இரவு நேரத்தில் வேறு எந்த சத்தமும் இல்லாததால் இக்குழந்தையின் அழுகை பேருந்தில் உள்ள சிலரின் தூக்கத்தை எளிதாகக் களைத்தது. குழந்தையின் அழுகை கோபியின் தூக்கத்தையும் விட்டு வைக்கவில்லை.
"ரே..ரே..ரே..ரே......"
"என் கண்ணு இல்ல, என் ராஜாத்தி இல்ல,....."
இவ்வாறு குழந்தையின் அழுகையை நிறுத்த குழந்தையின் தாய் முயற்ச்சித்தாள். ஆனால் குழந்தையின் அழுகை நிற்பதற்கான ஒரு அறிகுறியும் தென்படவில்லை.
இவற்றை எல்லாம் கேட்டுக்கொண்டிருந்த கோபியின் மனதில் சில கேள்விகள் எழுந்தன. அவனை விட அதிகமாக நேசிக்கும் அவனது பெற்றோர்களைப் பிரிந்து முழு திருப்தியையும், சந்தோஷத்தையும் அளிக்காத இந்த வேலையை ஏன் செய்ய வேண்டும்? எந்தச் சுமையும், பொறுப்புகளும் இல்லாத குழந்தைப்பருவத்திற்கு மீண்டும் செல்ல முடியுமா?
பதினைந்து நிமிடத்திற்க்குப் பிறகு பேருந்து புறப்பட்டது. குழந்தையின் அழுகையும் நின்றது, இவனும் தூங்கினான்.
மூன்று நாட்களை சந்தோஷமாகக் கழித்து, மீண்டும் திரும்பினான் பணிக்கு. அதே விருப்பமில்லா முகத்துடன்.
பி.கு: பிழைகளுக்கு மன்னிக்கவும்.